
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கடும் மழைகாரணமாக, காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள 9 ஆயிரத்து 679 ஏக்கர் காலபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயற்காணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 05 குளங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், ஒரு நீர்ப்பாசன வாய்க்காலும் சேதமடைந்துள்ளது.
அதேவேளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பின் கீழ் உள்ள வயல் நிலங்கள் ஏற்கனவே பெய்த மழைக்காரணமாக அழிவடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒலுமடு கமக்கார அமைப்பின் கீழ் காணப்படும் புலிமச்சினாதிகுளம், ஒலுமடுக்குளம், தாச்சரங்கன்குளம், முறியாக்குளம் என்பற்றில் நீர் மேவியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் முள்ளியவளை வடக்கு பகுதியில் நீர்ப்பாசன வாய்க்கால் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment