தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் ஆண்டறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் என்பன மீளவலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டி, அவற்றை ஆராய்ந்து பாதுகாத்து வைப்பதற்கும், எதிர்காலத்தில் பொருத்தமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்குமான சாத்தியப்பாட்டை ஏற்படுத்தி இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பில் அவ்வறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இலங்கையில் பின்னடைவைச் சந்தித்திருக்கக்கூடிய மனித உரிமைகள் நிலைவரத்தை சீர்செய்யக்கூடியவாறான பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கான அழுத்தத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்குவதற்கு தாயாராக இருப்பதாகவும் தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் இலங்கைப்பொலிஸாருக்கு வழங்கப்பட்டுவந்த பயிற்சிகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைத் தாம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழு, இராணுவத்தினரையும் பொலிஸாரையும் பயன்படுத்தி அப்பாவிப் பொதுமக்கள்மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதை சர்வதேச சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற வலுவான செய்தியை அது இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Post a Comment