Ads (728x90)


இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த நெருக்கடியால் சுகாதாரம் மற்றும் உணவு ஆகிய இரண்டு துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உணவு விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்துள்ளன. சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துகள் அரிதாகி, கொள்வனவு செய்வதற்கும் கடினமாகியுள்ளன. இதன் விளைவாக சில சந்தர்ப்பங்களில் சில அறுவை சிகிச்சைகள் கூட தாமதமாகின்றன.

எனவே நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உலகளாவிய ஆதரவு தேவை. இதற்கான ஒரு முயற்சியாக 'ரீபில்ட் ஸ்ரீலங்கா' தளம் (Rebuild Sri Lanka) என்ற நிதி சேகரிப்பு தளத்தை ஐநா அபிவிருத்தி செயற்றிட்டம் ஆரம்பித்துள்ளது.

எந்தவொரு நாட்டில் இருந்தும் www.undp.org/srilanka/donate என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் ஊடாக இலங்கைக்கு நிதி உதவியளிக்க முடியும் என ஐநா அபிவிருத்தி செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.

1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடி இதுவாகும். 5.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியின் அவசியத்தில் உள்ளனர். அத்துடன் ஏறக்குறைய 6.3 மில்லியன் இலங்கையர்கள் தங்களின் அடுத்த உணவுக்கு வழி தெரியாமல் உள்ளனர்.

இந்நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால் இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியளிப்பு பிரசாரத்தை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget