Ads (728x90)

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக மேலதிக ஒருங்கிணைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் துரித நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து தமது கவனத்திற்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும், சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கலுக்காக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினால் 60 மில்லியன் ரூபா நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக - சமைத்த உணவு அல்லது உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கு  பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.

1. பாதுகாப்பு நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு 03 நாட்களுக்கு சமைத்த உணவு பிரதேச செயலாளர் ஒழுங்கமைப்பில் வழங்க முடியும். 

மேலதிக நாட்களுக்கு வழங்க வேண்டியிருப்பின் அரசாங்க அதிபரின் அனுமதி பெற்று மேலும் 04 நாட்களுக்கு வழங்க முடியும் எனவும், அதற்கு மேலும் 07 நாட்களுக்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு வழங்க வேண்டிய தேவை ஏற்படின் அமைச்சின் செயலாளர் அனுமதி பெற்று வழங்கமுடியும் எனவும் தெரிவித்தார். 

2. சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருக்காமல் அவர்களுடைய வீடுகள் அல்லது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அல்லது சமைத்த உணவு வழங்கலாம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

3. அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் பிரதேச செயலாளர்கள் மூலமே பதிவு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே பிரதேச செயலகங்களுக்கு அவசர தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட தறப்பாள், நுளம்பு வலைகள், மடிக்கும் கட்டில்கள் வழங்கப்பட்டதற்கு மேலதிகமான தேவைப்பாடுகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு தம்மால் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலகங்களின் தேவைக்கு ஏற்ப மேலும் பங்கிட்டு வழங்கப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget