இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய ஓய்வூதியச் சட்டம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
Post a Comment