Ads (728x90)

இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராமத்தில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி பூங்கா கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

150 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனைக் கொண்ட இத்திட்டம் 2027 ஆம் ஆண்டளவில் தனது முதலாவது மின்சாரப் பங்களிப்பை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்கத் தயாராகி வருவதாக சூரிய பூங்கா கட்டுமான பணிகளின் ஆலோசனை பொறியாளர் திலங்க பண்டார தெரிவித்துள்ளார்.

சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம் முழுமையாக ஒரு தனியார் துறை முதலீட்டுத் திட்டமாகும். விக்டோரியா மற்றும் மேல் கொத்மலை நீர்மின் நிலையங்களுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மீள்சுழற்சி எரிசக்தி திட்டமாக இது அமையவுள்ளது. 

இத்திட்டத்திற்காக சுமார் 450 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முறையே 70 மெகாவாட் மற்றும் 80 மெகாவாட் என முதலீடுகளைப் பகிர்ந்துள்ளன.

தரைவழி சூரிய மின்சக்தித் தொழில்நுட்பத்தில் இலங்கையில் தற்போது பயன்படுத்தப்படும் ஆகச்சிறந்த நவீன முறைகள் இங்கு கையாளப்படுகின்றன.

முன்னைய திட்டங்களைப் போலன்றி இங்கு சூரிய மின்தகடுகள் தரையிலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் மின்தகடுகளுக்குக் கீழே உள்ள இடைவெளியில் காளான்கள் போன்ற குறைந்த சூரிய ஒளி தேவைப்படும் பயிர்களைப் பயிரிடும் விவசாயத் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 750 முதல் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆரம்பக் கட்டத்தில் 400 முதல் 500 பேர் வரை நேரடியாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதோடு பராமரிப்புப் பணிகளுக்காக நீண்ட கால அடிப்படையில் மேலும் பலர் உள்வாங்கப்பட உள்ளனர். 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ பகுதியில் அமைந்துள்ள இந்த மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலப்பரப்பில் உருவாகும் இத்திட்டம் வறட்சி காலங்களில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டிற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமைவதுடன் நாட்டின் பகல் நேர மின் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget