Ads (728x90)

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை அந்தச் சந்தர்ப்பத்தில் மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய இரு அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமையகத்திற்கும், ஏனைய இருவர் கொட்டாவை மற்றும் கடவத்தை பொலிஸ் நிலையங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிறைவேற்று ஜனாதிபதியை பகிரங்கமாகத் தகாத வார்த்தைகளால் திட்டி, அநாகரீகமாக நடந்துகொண்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை காரணமாகவே அவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் கதிர்காமம் புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் ஆசனப்பட்டிகள் இல்லாமையினால், அதிவேக வீதிக்குள் நுழைய பொலிஸார் அனுமதி வழங்காத காரணத்தால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன்போது அந்தப் பேருந்தில் பயணித்தவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்தச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பெயரைக் கூறி, பேருந்தில் வந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், அந்தச் சந்தர்ப்பத்தைக் கைபேசியில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget