Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற “AI Impact Summit 2026” உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.

இங்கு அரச தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, 'எவரையும் கைவிடாத வகையில், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொடர்பான பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்துகொண்டு, பரஸ்பரம் கற்றுக்கொள்ளவும் கூட்டாக இணைந்து முன்செல்லவும் இலங்கை தயாராக உள்ளது' எனக் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது அனைத்து நாடுகளுக்கும் சமமானதாகவும், கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதாகவும் அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

AI தொழில்நுட்பத்தை கடந்த கால தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்ட ஜனாதிபதி, இது தேசிய வளர்ச்சியை மாற்றியமைக்கும் ஒரு சக்தியாகக் கருதப்பட வேண்டும் என்றார்.

AI வசதி கொண்ட நாடுகளுக்கும், இல்லாத நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி, பல நாடுகளை பொருளாதார ரீதியாக ஓரங்கட்டும் அபாயத்தை உருவாக்குவதாகவும் எச்சரித்தார்.

இலங்கை இன்னும் முழுமையான உட்கட்டமைப்பை உருவாக்கவில்லை என்றாலும், திறமையான இளைஞர் பட்டாளம் மற்றும் வலுவான சட்ட அமைப்பைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்காக தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு சட்டங்கள் நவீனமயமாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

AI துறையில் ஒரு சில மொழிகள் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது கலாசார பன்முகத்தன்மையை அழிக்கும். எனவே உள்ளூர் மொழிகள் மற்றும் கலாசார அறிவை டிஜிட்டல் மயமாக்கி AI உடன் இணைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்காக பகிரப்பட்ட தரவு ஆளுமை, பொதுவான மொழி தரவுத் தொகுப்புகள், ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறைகள், பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கட்டமைப்புகள் ஆகிய நான்கு விடயங்களை முக்கிய பரிந்துரைகளாக ஜனாதிபதி முன்வைத்தார்.

இந்தியா போன்ற நாடுகள் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் கொண்டுள்ள தலைமைத்துவத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பான பிராந்திய AI வசதிகளை உருவாக்க இலங்கை ஒத்துழைக்கும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget