Ads (728x90)

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது கூட்டு மீளாய்வுகளை நிறைவு செய்துள்ளதுடன், சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக விடுவிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய தவணையுடன், இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் நேற்று வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் மற்றும் டிட்வா புயலின் பின்னடைவுகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் உள்நாட்டு சவால்களுக்கு மத்தியிலும், சீர்திருத்த திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் பொதுவாக வலுவாக இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை 2025 டிசம்பர் இறுதி வரையிலான அனைத்து அளவிடக்கூடிய செயல்திறன் அளவுகோல்களையும் பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், பெரும்பாலான கட்டமைப்பு மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது.

மத்திய கிழக்கு மோதல்களுடன் தொடர்புடைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அதிகரித்து வரும் எண்ணெய் விலைகள் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2025 இல் பதிவான 5வீதத்தில் இருந்து 2026 இல் 3வீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget