Ads (728x90)

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதன்முறையாக முதல்வர் விஜய் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். 

அப்போது, தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இந்த சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டு பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். 

மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையை தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாக பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்து பாடலை பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். 

மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். 

மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. 2026ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வர், பிரதமரை கேட்டுக் கொண்டார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget