Ads (728x90)

துறவறத்தின் தூய்மையைப் பேணவும், ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்தவும் தவறு செய்யும் எவரும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் துறவறத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ராமண்ய மகா நிகாயவின் தென்னிலங்கைக்கான பிரதான சங்கநாயக்கர் ஓமல்பே சோபித தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

புத்த சாசனத்தைப் பாதுகாக்கவும், சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் ஒரு 'சங்காயனாவ' (தர்ம சங்காயனாவ) அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், சங்க நீதிமன்றங்களுக்கு (சங்காதிக்கரண) அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மகா நாயக்க தேரர்கள் மிக விரைவாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பிக்கு சமூகம் தொடர்பில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற ஒரு சில கசப்பான சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இவற்றுக்காக ஒட்டுமொத்த பிக்கு சமூகத்தையும் அவமதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டார்.

ஒன்று அல்லது இரண்டு பேர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த பிக்கு சமூகமும் பொறுப்பேற்க முடியாது. அனைவரையும் குறைகூறுவது தவறானது. தவறு செய்பவர்களுக்கு எதிராகத் தர்மத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மகா நாயக்க தேரர்கள் இவ்வாறான விடயங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை ஏற்கனவே அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளனர். இப்போது செய்ய வேண்டியது அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதே ஆகும் என ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget