Ads (728x90)

ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 72 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

304 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 10 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

அத்துடன் மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியை 41 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget