தமது பதவி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர் ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது.
ஹிங்குராங்கொட பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுசந்த ஞானரத்ன, 2014 ஆம் ஆண்டு தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
பிரதேச சபையின் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறத் தவறியமை காரணமாக, அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாகக் கருதப்படும் என்ற வடமத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் 2014 ஆம் ஆண்டு அறிவிப்புக்கு எதிராகவே அவர் இந்த நிவாரணத்தைக் கோரியிருந்தார்.
நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை ஏகமனதாகத் தள்ளுபடி செய்து, பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை சட்டரீதியான காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறியதன் மூலம் மனுதாரர் சட்டத்தின் பிரகாரம் தனது தவிசாளர் பதவியை இழந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்றங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம், பிரதேச சபைகள் சட்டத்தின் 169 ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்தத் திருத்தத்தின்படி, ஒரு சபையின் பதவிக்காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு சந்தர்ப்பங்களில் வரவு செலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறத் தவறும் தவிசாளர், தனது பதவியை இராஜினாமா செய்தவராகவே கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment