Ads (728x90)

மதுபான உற்பத்தி நிறுவனங்களால் இதுவரை செலுத்தப்படாதுள்ள 6.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி நிலுவையை வசூலிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம், இந்நிறுவனங்களுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளது. 

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் முன்னிலையில், இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

பல மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 6 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதுவரி நிலுவை இதுவரை வசூலிக்கப்படாததற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள் 17 பேரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், நிலுவை வரியை உடனடியாக வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது. 

2023 ஜூன் 15 ஆம் திகதி நிலவரப்படி, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் மொத்த வரி நிலுவை 6,221 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், வரி நிலுவை முழுமையாக செலுத்தப்படும் வரை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்தவும், அவற்றை புதுப்பிக்காமல் இருக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. 

இந்த மனுவில், கலால் ஆணையாளர் நாயகம், நிதி இராஜாங்க அமைச்சர், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் 10 பிரபல மது உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன. 

அரசாங்கம் 2022 ஆம் ஆண்டில் நிர்ணயித்திருந்த வரி வருமான இலக்கை, 101 பில்லியன் ரூபாவால்  ஈட்டத் தவறியதாகவும், அதில் 26 பில்லியன் ரூபா கலால் வரி வருமானமாக இருந்ததாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். வரி வசூலில் அதிகாரிகள் காட்டிய அலட்சியமும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்ததாகவும்  மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget