Ads (728x90)

அரசாங்கம் நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அதனால் பாதிப்படையக்கூடியவர்கள் வேறுவிடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தை சுற்றிவளைத்து வருகிறார்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு  குறிப்பிட்டார்.

வருமான வரி செலுத்தாமல் புறக்கணித்து வருபவர்களை, அதனை செலுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

வருமான வரி சட்டத்தின் பிரகாரம் ஒருவர் வரி செலுத்தாது விட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அவர் மேன்முறையீடு செய்ய முடியும். இவ்வாறு இரண்டு தடவைகள் மேன்முறையீடு செய்யும்போது வழக்கு விசாரணை முடிவடையும்போது 15 வருடங்களுக்கும் அதிக காலம் செல்கிறது. அதனால் இந்த சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவந்துள்ளது.

அதாவது, வருமான வரியை ஒருவர் செலுத்த தவறினால் அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடுக்க முடியும். அதேபோன்று இந்த நாட்டின் பணம் வெளிநாடுகளில் வைக்கப்பட்டிருந்தால், அந்த பணத்தை 30 நாட்களுக்கள் கொண்டுவர வேண்டும் என அன்னியசெலாவணி சட்டத்தின் சில ஒழுங்குவிதிகளின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. 

அரசாங்கம் இவ்வாறு நாட்டுக்கு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கும்போது, அதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை, பிரசாரம் செய்து, மக்களை அதற்கு எதிராக தூண்டி அரசாங்கத்தை சுற்றிவளைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராகவும், விவசாயிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் மற்றும் புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை சுற்றிவளைத்து வருகிறது. இவ்வாறு எதிர்க்கட்சிகள் தங்களின் சுயநலத்துக்காக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன என்றார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget