Ads (728x90)

இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான் இன்று சிறைக்கைதிகளின் உரிமை பற்றி பேசுகிறார்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் கவலைக்குரியது. சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் இந்த மோதலுக்கும், உயிரிழப்புக்கும் ஒரு காரணம் என்று குறிப்பிட முடியாது. 

சிறைச்சாலை மறுசீரமைப்பை ஒரு இரவில் முன்னெடுக்க முடியாது. சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிக்கிறோம். 

சிறைச்சாலை கட்டமைப்பின் நெரிசல் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் திட்டமிட்ட வகையில் சிறைச்சாலைகளில் மோதல்கள் உருவாக்கப்பட்டன. அரசியல் நோக்கத்துக்காக சிறைக்கைதிகள் கொல்லப்பட்டார்கள். அவ்வாறான நிலை தற்போது இடம்பெறவில்லை. 

2022 ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குள் சென்று விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் கைதிகளுக்கு உயிரச்சுறுத்தல் விடுத்தார். அவ்வாறான கலாசாரம் தான் அன்று காணப்பட்டது.

முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் சிறைச்சாலை நெரிசல் தோற்றம் பெற்றது என்பதை போன்றே எதிர்க்கட்சியினர் பேசுகிறார்கள். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாவது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget