Ads (728x90)

இலவச சுகாதாரத் துறையை மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல் ஆகிய 3 முக்கிய பிரிவுகளின் கீழ், நாட்டின் சுகாதாரத்துறை வலுப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகாமைத்துவ நிறுவனத்தின் (JICA) கடன் உதவியின் கீழ் 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் அதிநவீன இருதய தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Coronary Care & ICU), கெதீட்டர் பரிசோதனைக் கூடங்கள் (Catheterization Labs), எக்ஸ்ரே (X-Ray), ஈ.சி.ஜி (ECG) வசதிகள், விசேட சிகிச்சை நிலையங்கள், வாட்டுக் தொகுதிகள், ஆய்வுக்கூடங்கள், கேட்போர் கூட வசதிகள் மற்றும் நூலகம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலையை மேம்படுத்துவதற்காக சுமார் 19,000 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்களை 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் சேர்த்து அநுராதபுரம் வைத்தியசாலையின் மேம்பாட்டுக்காக சுமார் 34,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பாரிய முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சில அபிவிருத்தித் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத காரணத்தினால் நாட்டுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை 18 மாதங்களுக்குள் வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களிடம் கையளிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் கடன் உதவியின் கீழ், 3,545 மில்லியன் ரூபா செலவில் 8 மாடிகளுடன் நிர்மாணிக்கப்படும் இந்த இருதய சிகிச்சைப் பிரிவு, அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக அமைவதுடன், இதற்காக வழங்கப்பட்ட சிறப்பான பங்களிப்புக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிகோ இசாமாரா (Akio Isomata) அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் புதிய இருதய நோய் மற்றும் இருதய மார்பு அறுவை சிகிச்சை பிரிவுக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் இத்தருணத்தில் கலந்துகொள்ளக் கிடைத்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். இன்றைய தினம் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கௌரவ ஜனாதிபதிக்கும், கௌரவ அமைச்சர்களுக்கும் மற்றும் அனைத்து இலங்கைத் தரப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget