நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுதுகள் பற்றி ஆராய்வதற்காக சீன நிபுணர்கள் குழுவொன்று இன்று கொழும்புக்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த மின் நிலையத்திலுள்ள மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்று பழுதாகியிருப்பதால் தேசிய மின்கட்டமைப்புக்கு 300 மெகாவோற் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு அடிக்கடி பழுதுகள் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கான நிரந்தரத் தீர்வை இந்தக் குழு பரிந்துரை செய்யவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
வறட்சியான காலநிலையால் நீர்மின்சார உற்பத்தி வெகுவாகக் குறைந்திருக்கும் இந்தச் சமயத்தில் நுரைச்சோலை மின்நிலையக் குறைபாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், எனவே, அதை உடனடியாகத் திருத்துவதற்காகவே இந்த நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment