தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சியின் முக்கிய சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலிய வாசியை நாடு கடத்துவதற்காக, விசாரணைக் குழுவினர் இந்த வாரம் அந்த நாட்டுக்குச் செல்லவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ய முயற்சித்தமை, உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருள்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் சிலர் ஜனவரி மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கிளிநொச்சி, வடமராட்சி மற்றும் மன்னாரைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை முயற்சியின் முக்கிய சந்தேக நபர் ஆஸ்திரேலிய வாசி என்று கண்டறியப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் பொலிஸார் அதனைத் தெரியப்படுத்தியிருந்தனர்.
அந்த நாட்டு அரசின் மூலம் அவரை நாடு கடத்துவதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவரை ஏன் நாடு கடத்தவேண்டும் என்ற ஆவணங்களுடன், இலங்கையிலிருந்து விசாரணைக் குழுவினர் இந்த வாரம் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். அந்த நாட்டு அரசிடம் ஆவணங்கள் கையளிக்கப்படும். ஆஸ்திரேலிய அரசு திருப்தியடைந்தால் சந்தேகநபர் நாடுகடத்தப்படுவார்.

Post a Comment