
எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில் அதாவது போலி நாட்டுப்பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சித்தால் அது பெரும் சோகமாகவே முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:-
இந்தப் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கௌரவ பிரதம மந்திரியுடன் இணைந்து இப்பிரேரணையை முன்வைக்கும் இந்த வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகக் கருதுகின்றேன்.
முன்னர் சிலோன் என அறியப்பட்ட இலங்கையின் காலனித்துவ ஆட்சியாளரில் இறுதி ஆட்சியாளராகவும் எமக்குச் சுதந்திரத்தை வழங்கி, வௌிநாட்டார் ஆட்சியிலிருந்து எம்மை விடுவித்தவர்களுமாகிய ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட இளவரசர் குளோசெஸ்டர் அவர்களின் பங்குபற்றுதலுடன் சுதந்திர பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. நாங்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக, அதைச் சரியாகக் கூறுவதானால் 443 ஆண்டுகளாக வௌிநாட்டார் ஆட்சியின் கீழ் இருந்தோம்.
சபாநாயகர் அவர்களே, தங்கள் அனுமதியுடன் இங்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு இலங்கைச் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஓர் இளம் சிறுவனாக நான் அந்நிகழ்வை நேரடியாக அங்கே பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்தேன். எமது முதலாவது பிரதம மந்திரி டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள், சுதந்திரம் வழங்கும் அந்த ஆவணத்தை இலங்கை மக்களின் சார்பில் பெற்றுக் கொண்டார்.
அன்று நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம். உண்மையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸானது டொமினியன் அந்தஸ்தை விரும்பாது முழுமையான சுதந்திரம், அதாவது புரண சுவராஜ்ஜே வேண்டுமென்று தமிழ்மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, புரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் வழிமுறை மட்டும் ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த மாட்டாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்குச் சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது. பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்பட்ட அனேக முயற்சிகளின் விளைவாக இந்த நாட்டின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துர்அதி‘்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உள்நாட்டு உருவாக்கம் என உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புக்கள் சுயசேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வதற்குச் சேவையாற்ற முடியாதவைகளாகவும், மாறாகப் பெரும்பான்மைவாதத்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்தன. முழு நாட்டினையும், அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும், கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடாத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில், சரியாகச் சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும். முன்பு இருந்த நிலைமைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், கூடுதலான அமைதியும் சுமுகநிலைமையும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கணிசமான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு, வன்முறைகளும் மோதல்களும் அற்ற எதிர்காலத்தை நாட்டில் உருவாக்கும் பொருட்டு பல்வேறு செயல்முறைகளில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது. இதன் அர்த்தம் யாதெனில், இலங்கை மக்கள் தமது இன, மத வேறுபாடுகள் அற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடு எனவும், இலங்கையர் என்ற அடையாளத்துடன் தாம் இலங்கைத் தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என்பதேயாகும்.
எமது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலங்கையில் சட்டவாட்சித் தத்துவங்களையும், ஜனநாயக மரபுகளையும் மேலும் பலப்படுத்தி, சுபீட்சம் மிகுந்த அபிவிருத்தியை அடையும் எமது விருப்பத்தை நிறைவேற்றும்.
ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதே அவசியமாகும்.
Post a Comment