Ads (728x90)

மசூதி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை முழுபலத்துடன் வேட்டையாடுவோம் என்று எகிப்து அதிபர் அப்துல் பதா அல்-சிசி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணம், பிர் அல்-அபெத் அருகேயுள்ள ரவுடா நகரின் சூபி மசூதியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் காயமடைந்து வெளியில் ஓடி வந்த மக்களை, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். ஒட்டுமொத்தமாக 305 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் குறித்து எகிப்து அதிபர் அப்துல் பதா அல்-சிசி கூறியபோது, “தீவிரவாதிகளின் தாக்குதல் கோழைத்தனமானது. இதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம். தவறிழைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. ராணுவமும், போலீஸாரும் முழுபலத்துடன் தீவிரவாதிகளை வேட்டையாடுவார்கள். மிகக் குறுகிய காலத்தில் சினாய் பகுதியில் தீவிரவாதிகள் வேரறுக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விமானப்படை தாக்குதல்


மசூதி மீது தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் எகிப்து போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சினாய் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அந்த வாகனங்களும் அதில் பயணம் செய்த தீவிரவாதிகளையும் விமானப்படை வீரர்கள் குண்டுகளை வீசி அழித்தனர். சினாய் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் கண்டனம்


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எகிப்து அதிபர் சிசியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ட்ரம்ப் கூறியபோது, “தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் வேரோடு அழிக்கப்படுவார்கள். அதற்கு அமெரிக்கா துணை நிற்கும்” என்றார்.

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் மசூதி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget