
இந்தப் பிரிவையடுத்து, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர். இவர்களுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட சிலரும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த மாதம் 12ஆம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ; பிரேமசந்திரனும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து சிவில் அமைப்புக்களையும் இணைத்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்தனர். இந்தப் புதிய கூட்டுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பேரவையின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வசந்தராஜா ஆகியோர் அதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இருகட்சிகளும் இணங்கியிருந்தன.
இதற்கிடையே ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ; பிரேமசந்திரன் இந்தியாவுக்கு அவசரமாகச் சென்று வந்த பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என்பதை எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி வலியுறுத்தி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் அதற்கு உடன்பட மறுத்து விட்டது. வேண்டுமானால் தமது கட்சியின் ஈருருளி (சைக்கிள்) சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் இல்லாவிடின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். சின்னத்தில் போட்டியிடுவதற்கு சுரேஷ; பிரேமசந்திரன் விரும்பவில்லை என்பதுடன், தமிழ் அரசுக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை உட்படுத்தப்பட்ட சிலரும் அதனை விரும்பவில்லை. இதேவேளை, காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிடுவதை ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் முக்கிய மையக் குழு உறுப்பினர்கள் விரும்பவில்லை.
இந்த நெருக்கடியான நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இந்தக் கூட்டுக்கு பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.
சின்னச் சிக்கலால், இரு கட்சிகளின் கூட்டும் உடைந்து பிரிந்துள்ளது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தமது கட்சியின் கொள்கையைக் கைவிடமுடியாது என்றும் அதனால், ஆனந்தசங்கரியைச் செயலராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய முடியாது எனவும் தெட்டத் தெளிவாகத் தெரிவித்துவிட்டது.
Post a Comment