
நள்ளிரவிற்குப் பின்னர் தேர்தல் சட்டங்களை மீறும் எவருக்கும் பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகொண்ட கலப்புத் தேர்தல் முறையூடான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், நாற்பத்தொரு நகரசபைகளுமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறவுள்ள அத்தேர்தலினூடாக எண்ணாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அத்துடன் குறித்த தேர்தலுக்காக நாடு தழுவிய ரீதியில் பதின்மூன்றாயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கெண்ணும் பணிகளை முன்னெடுப்பதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த திடீர் சுற்றிவளைப்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன், சட்டமீறல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நீதியானதும், நியாயமுமான தேர்தலை நடத்துவதற்கு சட்ட வரம்பிற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment