போரால் பாதிக்கப்பட்டு மீண்டுவரத் துடிக்கும் எமது வடக்கு மீனவர்களை, இந்திய மீனவர்கள் வதைக்கின்றார்கள். இழுவைமடியால் அவர்கள் வடக்குக் கடலில் செய்யும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. இது தெரிந்தும் கொழும்பு அரசு ஏன் மௌனமாக இருக்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பினார்.மீன்பிடி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்திய மீனவர்கள் நவீன படகுகளில், இழுவை மடிகளைப் பயன்படுத்தித் தொழில் செய்கின்றனர். இழுவைமடியினால் ஏற்படும் பாதிப்புக் குறித்து இங்கே எல்லோருக்கும் தெரியும். இந்தியக் கடலோரத்தில் இழுவைமடியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மீன்பிடியால் ஒட்டுமொத்தக் கடல் வளமும் அழிக்கப்பட்டு அங்கு மீன்களே இல்லாத நிலமை தோன்றியுள்ளது. மீன்கள் அதிகம் உள்ள எமது கடற் பரப்பை நோக்கி அவர்கள் படையெடுக்கின்றார்கள்.
வடக்குக் கடலில் குறிப்பாக யாழ்ப்பாண மீனவர்களே இந்திய மீனவர்களின் இழுவைமடிப் படகுகளினால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். தமது வளங்களை அழித்து விட்டு எமது மீன்களைச் சூறையாடிச் செல்வது மாத்திரமல்லாமல் எமது வளங்களையும் அழிக்கப் பார்க்கின்றார்கள். இந்திய மீனவர்கள் ஒரு கிலோ மீனைப் பிடிப்பதற்காக, 18 கிலோ உற்பத்தியாகக் கூடிய மீன்குஞ்சுகளை அழிக்கின்றார்கள்.
இந்திய மீனவர்கள் எங்கள் கடலிலிருந்து ஆண்டு ஒன்றொன்றுக்கு 500 பில்லியன் ரூபா பெறுமதியான வளங்களை அள்ளிச் செல்கின்றார்கள். இந்தியா ஏற்றுமதி செய்யும் மீன்களில் 40 சதவீதம் எமது வடக்குக் கடலில் பிடிக்கப்பட்டவைதான். இந்தத் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடும். ஆனால் இதுதான் உண்மை.
இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயங்கியது. வடபகுதி மீனவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக அவர்களது படகுகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகின்றன. இதனால் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் இந்திய மீனவர்களின் வருகை எமது கடற்பரப்புக்குள் குறைந்துள்ளது.
போர் முடிந்ததன் பின்னரும் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டுக் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதுகூட, கடற் படைக்கு அதிநவீன கப்பல்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் ஏன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கடற்படையால் தடுக்க முடியாமல் இருக்கின்றது. ஏன் கண்டுகாணாமல் அரசு செயற்படுகின்றது. இந்திய அரசுடன் பகைக்கக் கூடாது என்பதால் இவ்வாறு செயற்படுகின்றதா ? அல்லது என்ன காரணத்துக்காக அரசு பேசாமல் இருக்கின்றது. இல்லை பாதிக்கப்படுவது வடக்குத் தமிழ் மீனவர்கள் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகின்றதா ?
2010ஆம் ஆண்டிலிருந்து இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் பேச்சு நடக்கின்றது. ஆனால் முடிவு இன்னமும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இழுவைமடியைத் தடை செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி அரசிதழில் பிரசுரிக்கப்பட்டாகிலும் விட்டது.
இழுவைமடியைப் பயன்படுத்தி மீன்பிடி யில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை அல்லது தண்டம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள் ளது. அந்தச் சட்டத்துக்கு அமைவாக இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போதும் கைதாகும் இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.
தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். இந்திய மீனவர்கள் விடயத்தில் மிகக் கடுமையாக நடப்பதன் ஊடாகவே, அவர்களது வருகையைக் கட்டுப்படுத்த முடியும். வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் மீண்டு வருவதற்கு இது மிகவும் முக்கியமானது. இழுவைமடிப் படகுப் பாதிப்புத் தொடர்பில் பேசும்போது, எம்மவர்களும் எமது கண்ணைக் குத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டியுள்ளது.
ஆபத்தான கழிவுகள்
வடக்கின் யாழ்ப்பாணத்தில் குருநகர், வல்வெட்டித்துறை, நெடுந்தீவு அதேபோன்று மன்னாரில் பேசாலை, பள்ளிமுனை இந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினர் இழுவைமடியைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தங்கள் வளங்களை தாங்களே அழிக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுகின்றனர். இந்தத் தொழிலைக் கைவிடுமாறு கோரினால், முதலில் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துங்கள். அதன் பின்னர் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்கின்றனர்.
இவர்களுக்கு மாற்றுத் தொழில் உபகரணங்கள் வழங்கப்படவேண்டும். அதனை அரசு உடனடியாகச் செய்யவேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறலால் எமது வளம் அழிவடைவதைப் பற்றி முன்னர் பேசினேன். தற்போது இந்தியக் கழிவுகளால் எமது கடல் வளம் அழியப் போவதையும் நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்தியாவின் ஆபத்தான மருத்துவக் கழிவுகள், குப்பைகள், உக்காத பொருள்கள் இந்து மா சமுத்திரப் பெருங்கடலில் கொட்டப்படுகின்றன. அவை கடலில் கலந்து இப்போது யாழ்ப்பாணத்தின் தொண்டைமானாறுக் கரையோரத்தில் ஒதுங்குகின்றது.
கழிவுகள் கடலில் கொட்டப்படுவதன் ஆபத்து இங்கு எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆபத்தான மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த உயரிய சபையில் வலியுறுத்திக் கூறுகின்றேன் -– என்றார்.
Post a Comment