
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் மோதியது. முதல் கால் பகுதி ஆட்டத்தில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 20-வது நிமிடத்தில் இந்தியா முதல் கோலை அடித்தது. மன்தீப் சிங், ரிவர்ஸ் ஷாட் மூலம் அற்புதமாக இந்த கோலை அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் இந்திய அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
அடுத்த நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் ஜெர்மி ஹேவர்டு இந்த கோலை அடித்தார். இதனால் 2-வது கால் பகுதியின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. 3-வது மற்றும் 4-வது கால் பகுதியில் இரு அணிகள் தரப்பிலும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
ஜெர்மனி வெற்றி
முன்னதாக ‘பி’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணித் தரப்பில் கிறிஸ்டோபர், கிராம்பஸ் மேட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
தொடரின் 2-வது நாளான இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பிற்பகல் 12 மணிக்கு அர்ஜென்டினா - பெல்ஜியம் அணிகளும், 2 மணிக்கு நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகளும், மாலை 5.30 மணிக்கு ஜெர்மனி - ஆஸ்திரேலியா அணிகளும், 7.30 மணிக்கு இந்தியா - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன
Post a Comment