Ads (728x90)

அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம் இருக்கிறது என்ற போதிலும் ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்ததுடன் தோனியுடன் இணைந்து அருமையான கூட்டணி அமைத்தார். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தினாலேயே இந்திய அணி 188 ரன்கள் வரை குவிக்க முடிந்தது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு மணீஷ் பாண்டே கூறியதாவது:

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பது கடினமாக உள்ளது. இது நம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் மனச்சஞ்சலம் அதிகம் இருந்தது. ஆனால் இதுதான் கிரிக்கெட் என்பதும் அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள், ஜாம்பவான்கள் இருக்கும் போது வாய்ப்புக்காக நாம் காத்திருந்து அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது. 4-ம் நிலையில் சில வாய்ப்புகள் கிடைத்தது, இதில் முடிந்த அளவுக்கு செயல்பட்டேன். பேட்டிங் சேர்க்கை சில வேளைகளில் என்னை 5-ம் நிலைக்கு இறங்க பணிக்கிறது. இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அணியில் சிறப்பான டாப் ஆர்டர் உள்ளன, இவர்கள் 30-35 ஓவர்களை விளையாடி விடுகின்றனர். விராட் கோலி, தோனி (சிலவேளைகளில்) எனக்கு முன்னால் களமிறங்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும். இந்திய அணியில் 5-ம் நிலையில் விளையாடுவது கடினம். இதற்கு முன்னர் ரெய்னா, யுவராஜ் சிங் இந்த இடத்தில் விளையாடினார்கள். அவர்கள் இடத்தை நிரப்புவது கடினம். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே வாய்ப்புகளுக்காக பொறுமையுடன் காத்திருப்பது அவசியம்.

முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும், இதைத்தான் முதல் போட்டியில் செய்ய நினைத்தேன். ஆனால் கொஞ்சம் மந்தமான இன்னிங்ஸாகி விட்டது. எப்போதும் நான் விளையாடும் பாணியிலேயே தொடர விரும்புகிறேன். நேற்று தோனி என்னை தட்டி எழுப்பினார். பின் களத்தில் அவர் சிறந்த வீரர், 2 ஓவர்கள் வரை அவர் ஆதிக்கம் செலுத்தினார். முதலில் 170 ரன்கள் இலக்கு போதுமானது என்றே நினைத்தோம்.

ஆனால் நானும் தோனியும் ஜோடி சேர்ந்த போது இருமுறை மட்டை உள்விளிம்பில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது, பிறகு தோனி இரண்டு சிறந்த ஷாட்களை விளையாடினார்.

இதனாலேயே 188 ரன்களுக்குக் கொண்டு சென்றோம். தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்காக ஆடும் போது கிளாசெனை நான் பார்த்திருக்கிறேன், அப்போது எங்களுக்கு எதிராக சதம் எடுத்தார். அவர் எப்போதும் இப்படித்தான் விளையாடுவார். இதனால் இதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை. இவ்வாறு மணீஷ் பாண்டே கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget