உன்னா மற்றும் கத்துவா பலாத்கார சம்பவங்களை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன், டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணியை நடத்தினார்.நள்ளிரவில் நடைபெற்ற இந்த பேரணியில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், ராகுலின் சகோதரி பிரியங்கா அவரது கணவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
டெல்லி மான்சிங் சாலையிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி இந்தியா கேட்டில் முடிந்தது.இந்த பேரணிக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.
மேலும் பல பெண்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.பேரணியில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் உள்ள பெண்கள் வெளியே வரவே அச்சம் கொள்கின்றனர் என்றும், இந்த பிரச்சனையை சரிசெய்து பெண்கள் அமைதியாக வாழ வழிசெய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ராகுல் காந்தி தனது பேரணியை நடத்தியுள்ளார்.
Post a Comment