வடக்கு-கிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வட, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள், அவற்றின் சாதகத்தன்மைகள் தொடர்பாகவும் குறித்த அபிவிருத்தி பணிகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் நில விடுவிப்பு, பாதைகள் மற்றும் பாடசாலைகள் விடுவிப்பு, ஆனையிறவு உப்பளம், குறிஞ்சைத்தீவு உப்பளம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, முல்லைத்தீவு ஓட்டுத் தொழிற்சாலை, வடக்கு, கிழக்கு பிரதேசங்களின் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், படையினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளின் சமூக தாக்கங்கள், கேப்பாபிலவு காணி விவகாரம், வட்டகச்சி விவசாயப் பண்ணை விடுவிப்பு, ஒலுவில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி இதன்போது விரிவாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், அத்துறை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அக்கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் செவிமடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இனங்காணப்பட்டிருக்கின்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் அவற்றை புதிய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்வதாகவும் தெரிவித்தார்.
தனியார் முதலீட்டாளர்கள் மூலமாகவோ அல்லது அரச,தனியார் கூட்டு முதலீட்டு மூலமாகவோ தற்போது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment