Ads (728x90)

”தித்வா”புயலின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த லலித் அதுலத்முதலி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் தீர்மானித்துள்ளது.

மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசருமான விஜித் கே. மலல்கொடவினால் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2025 நவம்பர் 28 முதல் டிசம்பர் 03 வரை இலங்கையைத் தாக்கிய “தித்வா” சூறாவளி காரணமாகப் பெற்றோரை இழந்து, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த விசேட திட்டமானது அரச பல்கலைக்கழகங்கள், உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது.

சூறாவளி அனர்த்தம் காரணமாகத் தமது பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்து, அதன் விளைவாகக் குடும்பப் பொருளாதாரப் பின்னடைவுக்கு முகம் கொடுத்துள்ள மாணவர்களுக்குக் கைகொடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

விண்ணப்பப்படிவங்களை மஹபொல உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mahapola.lk ஊடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் அல்லது அந்தந்தப் பல்கலைக்கழகங்களின் மாணவர் நலன்புரிப் பிரிவுகளில் (Student Welfare Divisions) பெற்றுக்கொள்ள முடியும்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget