Ads (728x90)

இலங்கை போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

போரினால் உயிர்களை இழந்த அனைவருக்காகவும் நாங்கள் வருந்துகிறோம். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள், சாதாரண மக்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என எந்தத் தரப்பிலாவது பாதிக்கப்பட்டவர்களாக மாறி அவர்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்காகவும் நாங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். இந்த போர் மோதல்கள் விரைவில் முடிவடைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இவ்வாறான போர் மோதல்களை நிறுத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அந்த சர்வதேச நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ளோம். அந்த நிறுவனங்களுக்கும் தங்களது அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி இந்தப் போர் மோதல்களை நிறுத்துவதற்கான பொறுப்பு உள்ளது. 

புதிய தொழில்நுட்பம் மற்றும் இந்த அனைத்து விடயங்களுடனும், இது ஒரு புவியியல் எல்லைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது. அது எப்போது, எங்கு விரிவடையும் என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒரு நாடாக நாங்கள் தலையிடக்கூடிய எந்தவொரு வகையிலும், கோரிக்கையாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ தலையிட்டு இந்த மோதல்களை நிறுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget