Ads (728x90)

2026-2027 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுகளுக்காக தகுதிவாய்ந்த 200 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship) பொறியியல், அறிவியல், வர்த்தகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) படிப்புகளுக்கானது. 

மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship) முதுகலை பட்டப்படிப்புகளுக்கானது. இதில் பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship) தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் இளங்கலை தொழில்நுட்ப (B.Tech) படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கொமன்வெல்த் புலமைப்பரிசில் திட்டம் (Dr. A.P.J. Abdul Kalam Commonwealth Scholarship): பொறியியல், அறிவியல், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) படிப்புகளுக்கானது. 

மேற்கூறிய திட்டங்கள் ஒவ்வொன்றும் பாடநெறியின் முழு காலத்திற்கும் முழு கல்விக் கட்டணம், மாதாந்திர உணவுப் படி மற்றும் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான வருடாந்திர மானியம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன், திறமை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இது குறித்த மேலதிக விவரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்கள் விரைவில் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளமான www.mohe.gov.lk இல் வெளியிடப்படும்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget