Ads (728x90)

டித்வா அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கண்டி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதற்காகத் தேவையான காணிகளை விடுவிக்கும் செயல்முறையின் முன்னேற்றம் குறித்து பிரதேச செயலக மட்டத்தில் கேட்டறிந்த ஜனாதிபதி, எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்த்து அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராய்ந்த ஜனாதிபதி, பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு பிரதேச செயலாளரிடமும் தனித்தனியாகக் கேட்டறிந்தார்.

அனர்த்தத்தினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்கும் முன்னேற்றம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. தற்போது உறுதியாகக் கொடுப்பனவுகளை வழங்கக்கூடிய 4,488 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 3,038 வீடுகளுக்கான கொடுப்பனவுகள் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய கொடுப்பனவுகளையும் விரைவாக வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வேறு இடங்களில் குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களுக்காகக் காணிகளை அடையாளம் காணும் செயல்முறை மற்றும் அதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 

அதிக அபாய பிரதேசங்களில் மக்கள் குடியேறுவதைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், அது தொடர்பான தீர்மானங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மீள்குடியேற்றத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள, தற்போது தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கக் காணிகளை விரைவாக விடுவித்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மீள்குடியேற்றப் பணிகளை மிக விரைவில் நிறைவு செய்யுங்கள். வீட்டு வாடகை வழங்குவதை மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கிறேன். அதற்குள் இப்பணிகளை முடித்துவிடுங்கள் எனவும் தெரிவித்தார். 

Post a Comment

Recent News

Recent Posts Widget