Ads (728x90)

நவீன வசதிகளுடன் கூடிய சப்ரகமுவ மருத்துவ பீட வளாகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய திறந்து வைத்துள்ளார்.

குறித்த திட்டத்திற்காக சவூதி அரேபியா சுமார் 15 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இதற்காக சுமார் 2.876 பில்லியன் ரூபாயைப் பங்களிப்பு செய்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தற்போது ஏறத்தாழ 750 மாணவர்கள் கற்று வருகின்றனர். அதேவேளை, வருடாந்தம் சுமார் 160 மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக இப்பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். 

புதிய மருத்துவபீட வளாகம் ஒரே தடவையில் 500 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கக்கூடிய விடுதி மற்றும் 1,060 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அமரக்கூடிய கேட்போர்கூடம், 6 விரிவுரை மண்டபங்கள் மற்றும் நிர்வாகக் கட்டிடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. 

மேலும், மருத்துவ முற்கல்வி மையம், நூலகம், உணவகங்கள் மற்றும் ஊழியர் விடுதி போன்ற பல வசதிகளைக் கொண்டுள்ள இம்மருத்துவபீட வளாகம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கின்றது.

இலங்கையின் மருத்துவக் கல்வி முறையை வலுப்படுத்துவதிலும், தரமான சுகாதார சேவைகளை மேம்படுத்துவதிலும் இந்த புதிய வளாகம் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாஸர் அல்தாஸம் அல்கஹ்தானி மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget