போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்குத் தொடர்புடையதாக 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட யோசனைகள் குறித்து நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலவச சுகாதாரச் சேவையின் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் அதே அவதானத்தை, பொதுப் போக்குவரத்துச் சேவையின் முன்னேற்றத்திற்காகவும் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிய திட்டமொன்றின் ஊடாக பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் 2026 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தனித்தனியாகக் கேட்டறிந்தார்.
பழைய பேருந்துகளை படிப்படியாகப் போக்குவரத்தில் இருந்து நீக்கி, புதிய பேருந்துகளைச் சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
நகர்ப்புற குறுகிய தூரப் பயணங்களுக்காக மெட்ரோ பஸ்கள் போன்ற வசதிகளைக் கொண்ட பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களுக்கு வசதியான போக்குவரத்தை உறுதி செய்ய முடியும் என்றும் -ஜனாதிபதி தெரிவித்தார்.

Post a Comment