Ads (728x90)

நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றியுள்ளார்.

நாட்டின் தற்போதைய சட்ட அமைப்பில் ”சிறுவர்” என்பதற்கான வயது வரையறை வெவ்வேறு சட்டங்களில் 14, 16 மற்றும் 18 என மாறுபடுவதால் ஏற்படும் இடைவெளிகளைக் களைந்து, சிறுவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய சட்டத் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆண் மாணவர்கள் கட்டாயக் கல்வியைத் தாண்டி பாடசாலையிலிருந்து விலகும் போக்கைக் கட்டுப்படுத்தி, 13 வருட பாடசாலைக் கல்வியை நிறைவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக 2025இல் மாதிரித் திட்டமாகத் தொடங்கப்பட்ட 'C2 மையங்கள்', 2026ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படவுள்ளன.

பாடசாலை வாகனங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்புத் தரநிலைகளாக ஆசனப்பட்டி, பாதுகாப்பு கமராக்கள் மற்றும் சாரதிகளுக்கான பயிற்சிகளைப் போக்குவரத்து அமைச்சு கட்டாயமாக்கியுள்ளது. அத்துடன், சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்வதும் உறுதிசெய்யப்படும்.

விடுமுறைக் காலம் என்பது மாணவர்களின் மன அமைதிக்கு மிகவும் அவசியமானது என்பதால், அந்தக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளை வழங்கி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டாம் என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget