Ads (728x90)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் 20:20 ஆசியக் கிண்ணம்-2026 தொடரின் 'பி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. 

டுபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை எடுத்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் சோபனா மோஸ்தாரி 34 ஓட்டங்களையும், திலாரா அக்பர் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சமூதி பிரபோத 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

115 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை மகளிர் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா 18 ஓட்டங்களையும், இமேஷா துலானி 12 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் மருபா அக்பர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget